Monday, January 2, 2012

வலிப்பு நோயுள்ள பெண்களும் அம்மாவாகலாம்!

கர்ப்பிணி பெண்களைப் பொறுத்தவரை மகப்பேறு என்பது மறு ஜென்மம் போன்றது. எல்லா பெண்களுக்குமே இது பொருந்தும் என்றாலும் வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு 24 மணிநேரமும் திக்திக்தான்! பிரசவத்தின் போது வலிப்பு நோய் வருமா? இதனால் தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கலக்கமும் டென்ஷனும் பி.பி.யை எகிற வைத்துக் கொண்டே இருக்கும்.
ஆனால், "இப்படி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. வலிப்பு நோய்களுக்கு இப்போது மருந்துக்கள் வந்துவிட்டன" என்கிறார் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மூளை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் எம்.ஏ.அலீம்.
"ஒரு காலத்தில் வலிப்பு நோயைக் காரணம் காட்டி பெண்ணோ, ஆணோ விவாகரத்து பெற சட்டத்தில் வழி இருந்தது. ஆனால், இன்று வலிப்பு நோய் குணப்படுத்தக்கூடியது என்பதால் அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.
 பொதுவாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு எப்போதும் ஒரு கலக்கம் இருக்கும். அந்தப் பொண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலாமா...கூடாதா? அப்படியே செய்து வைத்தால் குழந்தை பிறக்கும்போது பாதிப்பு வருமா? இப்படி கேள்விகளால் குழம்பியிருப்பார்கள். இந்த குழப்பம் தேவையே இல்லை. வலிப்பு நோயுள்ள பெண்ணும் தாராளமாக திருமணம் செய்து தாய்மை அடையலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து அதற்கான மருத்துவ ஆலோசனைகளை பெற்றாலே போதும் எந்த சிரமமும் இல்லாமல் குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
அதேபோல், வலிப்பு நோயுள்ள எல்லா பெண்களுக்குமே கர்ப்ப காலத்தில் வலிப்பு வரும் என்று சொல்லி விட முடியாது. சுமார் 80 சதவீதம் பேருக்கு மட்டுமே வலிப்பு வர வாய்ப்புண்டு. அதற்கு சில காரணங்கள் உண்டு. அந்த நோய்க்காக தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்துகளை கர்ப்ப காலத்தில் தவிர்க்கும் போது, அந்த மருந்துகளின் அளவு ரத்தத்தில் குறைந்து போவதாலும், உடலில் ஏற்படும் சில ஹார்மோன் அளவுகளின் ஏற்ற இரக்கங்களாலும், தூக்கமின்மை, அதிகமான மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் இப்பிரச்சினை வரலாம்.
கர்ப்பமடைவதற்கு முன் ஒரு மாதத்தில் 2 அல்லது 3 முறை வலிப்பு வருகிறது என்று வைத்துக்கொண்டால், கருத்தரிக்கும்போது, இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்கும். அதேவேளையில் கர்ப்பமடைவதற்கு முன் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வலிப்பு ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் வலிப்பு வர வாய்ப்பு மிகமிகக் குறைவு.
மொத்தத்தில் வலிப்பு நோய்க்குள்ளான பெண்கள் கர்ப்பமான பின்பு கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கர்ப்பம் தரித்து 7 மாதங்களுக்கு பின் ரத்த அழுத்தம், உப்புநீர் வெளியேறுதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். இதோடு வலிப்பும் வரும். இதை மருத்துவத்தில் எக்ஸாம்சியா காலம் என்பார்கள். இக்காலத்தில் உடல் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு, வலிப்பு நோயால் குழந்தையும் பாதிக்கப்படும். இத்தகைய வலிப்பு காரணமாக கர்ப்பிணிப் பெண்ணுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் காயம் ஏற்படவும் கூடும். அரிதாக சிலருக்கு கருப்பையில் இருந்து விடுபட்டு குழந்தை இறந்து போகவும் நேரிடலாம்; குழந்தையின் மூளையில் ரத்தக் கசிவு அபாயமும் உள்ளது.
கர்ப்பம் தரித்து 5 மாதங்களுக்குப் பிந்தைய காலத்தை 'ப்ரி எக்லாம்சியா' என்பார்கள். இந்த காலத்தில் ரத்த அழுத்தம் மற்றும் உப்புநீர் மட்டுமே வெளியேறும், வலிப்பு வராது.
வலிப்பு நோய் நீக்கி மருந்துகள் உட்கொள்ளும் பெண்களுக்கு உடல் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க ஆறுமடங்கு அதிக அபாயம் இருக்கிறது. பெரும்பாலும் வலிப்பு நோய்க்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வலிப்பு நீக்கி மருந்துகள் உட்கொண்டும், வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருப்பதுமே இதற்கு காரணம்.
'பினடாயின்' வகை வலிப்பு நீக்கி மருந்துகள் உட்கொள்ளும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உதடு மற்றும் தாடை பிளவும், இதய பாதிப்பும் உண்டாக கூடும். 'வால்பரேட்' ரக வலிப்பு நீக்கி மருந்து நரம்பு குழல் பாதிப்பையும், இதய, ரத்த குழாய் பாதிப்புக்கள் மற்றும் சிறுநீரக உறுப்புக்கள் பாதிப்பையும் குழந்தைகளுக்கு உண்டாக்கும். 'கார்பயசிப்பின்' ரக வலிப்பு நீக்கி மருந்துகள் மூளை திசுக் குழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவையெல்லாம் வைத்து வலிப்பு நோயுள்ள பெண்களுக்கு மகப்பேறு மிகவும் சிரமமாக இருக்குமோ என்று எண்ணத் தேவையில்லை. கர்ப்பகாலத்தில் இந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான அளவு உட்கொண்டால் தடுத்துவிடலாம். முதல் கட்டமாக வலிப்பு நோயுள்ள பெண்ணுக்கு திருமணம் செய்யும் முன், வலிப்பு நோய் நிபுணர் ஒருவரின் ஆலோசனையை பெற வேண்டும். அதுமட்டுமல்ல.. கர்ப்பமடைந்த காலத்தில் இருந்து பிரசவம் வரை மகப்பேறு நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டும். இப்படிச் செய்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம்." என்கிறார் எம்.ஏ.அலீம்.

 
Dinakaran

No comments:

Post a Comment